நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) அறிவித்துள்ளது. இன்றைய (07.04.2025) நிலவரப்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவே, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் அளவுக்கு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கம் ஏற்படும் போது அதற்கான பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலவரத்தில், ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை, இலங்கையின் அகலாங்குகளுக்கு சூரியன் உச்சநிலை அடைவதற்கான நிலைமை காணப்படுகிறது. இன்று (7) நண்பகல் 12.12 மணிக்கு, கொழும்பு, அவிசாவளை, தலவாக்கலை, திம்புள்ள, கலக்கும்புர மற்றும் தம்பகல்ல ஆகிய பிரதேசங்களிலும் சூரியன் உச்சம் அடைவதற்கான நிலை ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.