நாட்டில் பால்மா விலை அதிகரிப்பை தொடர்ந்து ஏற்படவுள்ள மற்றுமொரு விலை மாற்றம்!



இலங்கையில் பால் தேநீரின் விலை மற்றும் பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகரிக்கவுள்ளன. இந்த தகவலை அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிவிப்பின்படி, பால் மாவின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்படும். மேலும், பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலையும் 10 ரூபாயால் உயர்த்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் வீழ்ச்சியடைந்த முட்டையின் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கப்போவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதன் காரணமாக, முட்டை உற்பத்தியாளர்கள் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அன்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்தார்.

இதன் பின்னணியில், முட்டைக்கான நியாயமான விலையை நிர்ணயம் செய்து, முட்டை உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் கூறியுள்ளார்.